ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

வியாழன், 25 ஜனவரி, 2024

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (62) புட்டில் = BOTTLE.

 

நமது வாழ்க்கையில் “பாட்டில்”கள் தவிர்க்கவியலாத ஒன்றாக ஆகிவிட்டன. மருந்து ”பாட்டில்”, தண்ணீர்ப் ”பாட்டில்”, எண்ணெய்ப் “பாட்டில்”, குளிர் பானப் “பாட்டில்”, பூச்சிமருந்துப் “பாட்டில்” எனப் பலவிதமான ”பாட்டில்”களைப் பயன்படுத்தி வருகிறோம் !

 

உடன்நலனைக் கெடுத்துக் கொள்வதில் தீராத தாகமுடைய ஒரு பகுதி மக்கள் மதுபானப் “பாட்டில்”களுடன் உறவாடுவதில் தனி இன்பம் காண்பதையும் நாம் அறிவோம். இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ”பாட்டில்”கள் கண்ணாடியாலும் (GLASS), ஞெகிழி (PLASTIC), கரிம நீரகம் (P.V.C), பீங்கான் (CERAMIC) போன்ற பொருள்களாலும் செய்யப்பெறுகின்றன !

 

பள்ளி மாணவன் ஒருவன் என்னிடம் ”அய்யா, பாட்டில் என்பது ஆங்கிலச் சொல் அன்றோ ? தமிழில் அதை எவ்வாறு சொல்வது ?” என்று வினவினான் !


அவன் இவ்வாறு கேட்டவுடன் சற்றுத் தடுமாறிப் போனேன். நாளை சொல்கிறேன் கண்ணா என்று சொல்லிவிட்டு, வீட்டிற்கு வந்து சிந்தனைக் குதிரையேறி உலாவரத் தொடங்கினேன். இடையில் ஒரு குளம்பி (COFFEE) அருந்தி சிந்தனைக் குதிரையைச் சீண்டிவிட்டேன். அது விரைந்து ஓடத் தொடங்கியது !

 

எனது அகவையில் 65 ஆண்டுகள் குறைந்து ஒரு நொடியில் பள்ளிப் பருவத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். ஒரு நாள் என் தந்தையார், என்னை அழைத்து கடைக்குச் சென்று ஒரு “புட்டி” மண்ணெண்ணெய் வாங்கி வருமாறு பணித்தார். கையில் ஒரு உருபா பணத் தாளையும், கண்ணாடிப் “பாட்டில்” ஒன்றையும் திணித்தார் !

 

கடைக்குச் சென்று ஒரு “புட்டி” மண்ணெண்ணெய் கேட்டேன். இலிட்டர் (லிட்டர்) அளவைகள் நடைமுறைக்கு வராத காலம் அது. நல்லெண்ணெய் முதலிய பிற எண்ணெய்கள் “சேர்” என்னும் கொள்ளளவிலும், மண்ணெண்ணெய் மட்டும் “புட்டி” என்னும் கொள்ளளவிலும் விற்கப்பட்ட காலம். அளவு “பாட்டில்” ஒன்றைக் கொண்டு ஒரு ”புட்டி” மண்ணெண்ணெய் நான் கொண்டு சென்ற “பாட்டிலில்” ஊற்றப்பட்டது !

 

கடைக்காரரிடம் கேட்டேன், அய்யா ! அது என்ன புட்டி என்னும் அளவு ?”


அவர் சொன்னார், தம்பீ ! ”பாட்டில்” என்ற சொல்லைத் தான் ”புட்டி” என்கிறோம். “புட்டி” என்பது மாறாத கொள்ளளவு கொண்ட ஒரு அளவு. இந்த அளவு “பாட்டில்” எல்லாக் கடைகளிலும் ஒரே கொள்ளளவு உடையதாகத் தான் இருக்கும்”.

 

கடைக்காரர், அந்தக் காலத்திலேயே தமிழில் ”புலவர்” பட்டம் பெற்றவர். அவர் என்னைப் பார்த்து, “தம்பீ ! தமிழில் “புட்டில்” என்று ஒரு சொல் இருக்கிறது. திருமுருகாற்றுப் படையில் “அம் பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு “ என்று ஒரு வரி (191) வரும். ”காட்டு மல்லிப் பூக்களைப் பறித்து புட்டிலில் சேகரித்து” என்று இதற்குப் பொருள்” !

 

கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலில் 80 ஆவது பாட்டில் “அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து” என்று ஒரு வரி உண்டு. அழகாகப் புனையப்பட்ட புட்டிலில் வைத்து என்று இதற்குப் பொருள்” !

 

அகநானூற்றில் 122 ஆவது பாடலில் “அரி பெய் புட்டில் ஆர்ப்ப...” என்று ஒரு வரி வருகிறது. அம்புகள் வைக்கப் பெற்ற புட்டில் என்று இதற்குப் பொருள்” !


உட்பக்கம் குழிவாக அமைந்த, பொருள்கள் வைக்கத் தக்க கலன் அக்காலத்தில் “புட்டில்” என்று வழங்கப் பெற்றிருக்கிறது !

 

அம்புகள் செருகி வைக்கும் புட்டில், பூக்கள் கொய்து சேகரிக்கும் புட்டில், காடுகளிலிருந்து தேனடைகளைச் சேகரிக்கும் புட்டில், கள் பெய்து வைக்கும் புட்டில் எனப் பல வகைகளில் அக்காலத்தில் புட்டில் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது” !

 

பொதுவாக உட்குழிவான வாய் குறுகிய குவளை அல்லது செம்பு போன்ற ஒரு கொள்கலனைத் தான் புட்டில் என்று அக்காலத்தில் வழங்கி வந்திருக்கின்றனர். இந்தப் புட்டிலின் வாய்ப்பகுதி (MOUTH) உடற்பகுதிக்கு இணையானதாகவும் அல்லது குறுகியதாகவும் பயன்பாட்டுக்குத் தக்கபடி இருந்திருக்கிறது” !

 

வணிகம் செய்வதற்காகவும், மதப் பரப்புரைக்காகவும், இந்தியாவுக்கு - குறிப்பாகத் தமிழ் நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர் “புட்டில்” என்னும் சொல்லைத் தங்கள் நாட்டிற்குத் தத்து எடுத்துச் சென்று “பாட்டில்” என்று பெயர் சூட்டி வழங்கலாயினர். தமிழ் மொழியானது ஆங்கிலத்திற்கு இரவல் கொடுத்த எத்துணையோ சொற்களுள் “புட்டில்” என்பதும் ஒன்று” !

 

தமிழர்கள் “புட்டில்” என்பதை, “புட்டி” என்று சுருக்கி வழங்கலாயினர். குழந்தை துயில் கொள்ளும் “தொட்டில்” என்னும் சொல் சுருங்கி “தொட்டி” என்று வழங்கப் பெறுவதைப் போல், “புட்டில்” காலப்போக்கில் “புட்டி” ஆயிற்று என்கிறார் பாவாணர் தனது வேர்ச் சொற் கட்டுரைகள் என்னும் நூலில் (பக்.286)” !

 

புட்டில்” என்னும் சொல் அல்லாமல் ”மணிக்கலன்” என்ற சொல்லும் பண்டைக் காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ”மணிக்கலன் நிறைந்த மணம் நாறு தேறல்...” என்பது புறநானூற்றுப் பாடல் வரி (397:14). குறுந்தொகைப் பாடல் ஒன்று (193:1) மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன...” என்று “பாட்டில்” பற்றிய செய்தியை விளம்புகிறது !

 

பதிற்றுப் பத்து என்னும் தொகை நூலில் “மணிக்கலத்து அன்ன மா இதழ் நெய்தல் பாசடை..” என்னும் வரி “பாட்டில்” என்பதற்கு நேரான தமிழ்ச் சொல் “மணிகலன்” என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.” !

 

கடைக்காரரின் தெளிவான விளக்கம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது. தமிழ்ச் சொல்லான “புட்டில்” ஆங்கிலத்திற்குச் சென்று, அங்கு “பாட்டில்” என வழங்கப் பெறுவதை அறியாத நாம், இற்றைத் தமிழகத்தில் “பாட்டில்” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு, நேரான பொருள் தரும் தமிழ்ச் சொல்லைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். என்னே நம் அறியாமை !

 

இனி, பாட்டில்” என்பதைப் “புட்டி” என்றே அழைப்போம். இந்த இடத்தில், தடிமனான கண்ணாடி அணிந்த ஒருவரை “சோடாப் புட்டிக் கண்ணாடி” என்று கேலியாக அழைப்பதை ஒப்பிட்டுப் பாருங்கள் கேலிப் பேச்சில் மட்டும் “புட்டி” பயன்படுகிறது. பிற இடங்களில் “பாட்டில்” நிலைபெற்று விட்டது. “புட்டி” என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் வேறு சில சொற்களையும் பார்ப்போமா !.

 

-------------------------------------------------------------------

WATER BOTTLE...............= தண்ணீர்ப் புட்டி

OIL BOTTLE......................= எண்ணெய்ப் புட்டி

TONIC BOTTLE.................= நல்லிப் புட்டி

SYRUP BOTTLE................= நலங்குப் புட்டி

LIQUEUR BOTTLE............= மதுப் புட்டி

TABLET BOTTLE.............. = மாத்திரைப் புட்டி

CAPSULE BOTTLE............= குளிகைப் புட்டி

COOL DRINKS BOTTLE...= பானகப் புட்டி

MEDICINE BOTTLE...........= மருந்துப் புட்டி

MILK BOTTLE....................= பால்புட்டி

BOTTLE MILK....................= புட்டிப்பால்

BOTTLING PLANT.............= வளிம நிரப்பு ஆலை

---------------------------------------------------------------------------------

ஆக்கம் +  இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

”புதுச்சொல் புனைவோம்”,வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு:2055: சுறவம் (தை) 11]

{25-01-2024}

----------------------------------------------------------------------------------

 


செவ்வாய், 21 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (61) காலிகை =CALENDAR.


காலிகை = CALENDAR

-----------------------------------------------------------------------------------

எந்தவொரு நிகழ்வையும் நினைவில் வைத்துக் கொள்ள நமக்குத் தேவை அஃது எப்பொழுது நிகழ்ந்தது என்பதை  அடையாளப்படுத்தும்  ஒரு குறியீடு ! இந்தியா எப்பொழுது விடுதலை பெற்றது ? இதை நமக்கு நினைவுபடுத்துவது 1947 என்னும் ஆண்டுக் குறியீடு !


எந்த மாதத்தில் விடுதலை பெற்றது ?  இதை அடையாளப் படுத்துவது ஆகத்து என்னும் மாதக் குறியீடு !  எந்த நாளில் விடுதலை பெற்றது என்பதை அடையாளப் படுத்துவது 15 என்னும் நாள் குறியீடு !

 

நான் எப்பொழுது வீட்டிலிருந்து அலுவலகம் புறப்பட்டேன் ? இதற்கு விடை சொல்வது “காலை” என்னும் வேளைக் குறியீடு ! அலுவலகம் எப்பொழுது இயங்கத் தொடங்குகிறது ? இதற்கு விடையளிப்பது “மணி” என்னும் சிறுகால் (சிறிய காலப் பகுதி) குறியீடு!


இத்தகைய குறியீடுகள் தான் மனிதனின் நினைவுகளைக் குழப்பத்திலிருந்து மீட்கின்றன ! இந்தக் குறியீடுகளை எழுத்து வடிவில் வைத்துக்கொண்டால் அவை நிலைத்து நிற்கும் என்பதை அறிந்த மனிதன், அதற்கு வாய்ப்பாக வடிவமைத்துக் கொண்டது தான் “காலண்டர்” (CALENDAR) !


நடைமுறையில் உள்ள “காலண்டர்”கள் இரண்டு வகைப்படும். அவை (01) அன்றாடம் நாளையும் கிழமையையும் காட்டும் “நாள்காட்டி” என்னும் “DAILY SHEET". (02) மாதப் பெயரையும், அம்மாதத்தில் உள்ள நாள்களையும், அந்த நாள்களுக்கு உரிய கிழமைகளையும் காட்டும் “மாதங்காட்டி” என்னும் “மதிகாட்டி” “MONTHLY SHEET" ! (மதி என்பதற்குப் பிற பொருள்களுடன் ”மாதம்” என்னும் பொருளும் உண்டு !


”காலண்டர்” என்பதை “நாள்காட்டி” என்னும் சொல்லால் அழைக்கிறோமே தவிர ”மதிகாட்டி” என்னும் சொல் இன்னும் வழக்கில் வரவில்லை. படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இன்றி, அனைவரது வாயிலும் புகுந்து புறப்படும் சொல் “காலண்டர்” !


ஆங்கிலேயர் அகன்றுவிட்டாலும்அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம் மட்டும் இன்னும் அகலவில்லைசரி ! காலண்டர் என்பதைத் தமிழில் எப்படி அழைக்கலாம் ?

 

”கால்” என்பதற்குத் தமிழில் பிற பொருள்களுடன் “காலம்” என்னும் பொருளும் உண்டு. “காலண்டர்” என்பது காலம் உரைக்கும் ஒரு கருவியல்லவா ? “இகை” என்றால் “கொடு” என்று பொருள். காலத்தை அல்லது காலத்தின் உட்கூறுகளை நமக்குச் செய்தியாகக் கொடுக்கும் கருவியை “கால் + இகை = காலிகை” என்று கூறுதல் தவறில்லையே !


நாம் பார்க்கும் அந்த நொடியில் அற்றை நாள் (அன்றைய நாளில்) அல்லது பிற்றை நாள் (பின்னொரு நாளில்) நிலவும் நாண்மீன் (நட்சத்திரம்), பிறை நிலை, கதிர்மதி நிலை (திதி), கிழமை, மாதம் முதலிய காலப் பகுதிகளைச் செய்தியாக நமக்குக் கொடுக்கும் கருவி என்பதால் இதைக் “காலிகை” என்று அழைத்தல் பொருத்தமானது !


உலகில் உள்ள ஒவ்வொரு பொருட்கும், மக்கள் உள்ளத்தில் எழும் ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு சொல் தோன்றுவது இன்றியமையாதது ஆகும். ஆயினும், ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு புதுச் சொல் அமைவது இயலாது. ஆதலல் பழஞ் சொற்களினின்றே புதுச் சொற்கள் திரித்துக் கொள்ளல் வேண்டும். கருத்துகள் பல்கப் பல்கச் சொற்களும் பல்க வேண்டி இருப்பதால், ஒரு மொழி முழு வளர்ச்சி அடைவதற்குப் பல்லாயிரக் கணக்கான திரிசொற்கள் தேவையாயுள்ளன.  (பாவாணரின் சொல்லாராய்ச்சிக்  கட்டுரைகள் நூல், பக்.90)

 

பாவாணரின் வழிகாட்டுதலுக்கு இணங்க “கால்” (காலம்) என்னும் சொல்லிலிருந்து “காலிகை” என்னும் புதிய சொல்லைத் திரித்து அதை ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் ”CALENDAR” என்னும் சொல்லுக்கு இணையான சொல்லாக அறிமுகப்படுத்துகிறேன் !


ஒரு புதிய சொல் உருவாக்கப்படும் போது, அதிலிருந்து பல கிளைச் சொற்களை உருவாக்கும் வாய்ப்புள்ளதாக அச்சொல் நெகிழ்ச்சித் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். "CALENDAR" என்பதற்கு இணையாக “நாட்காட்டி”யை இருத்திக் கொண்டால், CALENDAR YEAR என்பதை நாட்காட்டி ஆண்டு என்று சொல்ல வேண்டிவரும். இச்சொல் பொருத்தமானதாக இல்லை !

  

எனவே கிளைச் சொற்களை உருவாக்க எந்தவகையிலும் இடையூறு தராத  காலிகை என்னும் சொல்லை நாம் புழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் ! “காலிகையிலிருந்து உருவாகும் கிளைச் சொற்கள் அடியில் தரப்பட்டுள்ளனஅவற்றைப் பலுக்கிப் பாருங்கள் !

 

காலிகை” என்னும் சொல் முற்றிலும் புதியது என்பதால் அதை ஏற்றுக் கொள்ளச் சிலருக்குத் தயக்கம் இருக்கும்தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும்போகப் போகப் பழகிவிடும்முற்றிலும் புதிய சொல்லான “CORONA”வை நாம் தயக்கமின்றி ஏற்கவில்லையா ? சுனாமியை (TSUNAMI) ஏற்கவில்லையா ? “காலிகை”யை ஏற்பதிலும் அத்தகைய நெகிழ்ச்சித் தன்மையை நாம் காண்பிக்க வேண்டும் !


"காலிகை” என்னும் சொல் வடிவில் சிறியது; பொருளில் பொலிவுடையது; ஓசையில் இனியது ! எனவே “காலிகையை இனி நாம் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம் !


-----------------------------------------------------------------------------------

 

      CALENDAR....................................= காலிகை  

     DAILY CALENDAR.......................= அற்றைக் காலிகை

     DAILY  SHEET................................= அற்றைக் காலிகை

     MONTHLY  CALENDAR...............= மாதக் காலிகை

     MONTHLY  SHEET.........................= மாதக் காலிகை

     CALENDAR MONTH.....................= காலிகை மாதம்

     CALENDAR YEAR.........................= காலிகை ஆண்டு

 

 ----------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்,

”புதிய சொல்லாக்கம்” வலைப்பூ,

[தி.பி.2052, சிலை (மார்கழி) 06]

{21-12-2021}

-----------------------------------------------------------------------------------

காலிகை =CALENDAR


  

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (60) ஊனடிசில் = BRIYANI


ஊனடிசில் =  BRIYANI

--------------------------------------------------------------------------------------

ஊன்சோறு என்னும் சொல்லைச் சங்ககாலப் புலவர்கள் பல இலக்கியங்களில் எடுத்து ஆண்டிருக்கின்றனர். ஓரிரண்டை மட்டும் இங்குப் பார்ப்போம் !


”ஊன்சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்” என்பது புறநானூற்றுப் பாடல்-33, வரி.14.”


அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் என்று இதே புறநானூறு பாடல் 113, வரி 02-ல் சொல்கிறது !

 

ஆடுற்ற ஊன்சோறு”, என்கிறது மதுரைக் காஞ்சி (பாடல் வரி 35). இதே மதுரைக் காஞ்சியில் இன்னொரு இடத்தில்புகழ்படப் பண்ணிய பேர்  ஊன் சோறும் (பாடல் வரி 533) என்னும் வரி வருகிறது !

 

எடுத்துக் காட்டுக்காக இரண்டு இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைச் சுட்டியுள்ளேன். ஊன்சோறு என்றால் என்ன ?


ஊன் என்றால் தசை என்று பொருள்.  இஃதன்றி நிணம்கொழுப்புபுலால்இறைச்சிஉடல் என்றெல்லாம்  பொருள் சொல்கிறது கழகத் தமிழ் அகராதி ! தசை என்பதை “சதை” என்று சொல்வது இக்கால வழக்கு !

 

ஊன் கலந்து செய்யப்படும் சோறு ஊன்சோறு” !இக்காலத்தில் “பிரியாணி” என்று சொல்கிறோமே அதைத் தான் அக்காலத்தில் ஊன்சோறு (ஊன் = கறி) என்று வழங்கி இருக்கின்றனர் ! ஊன்சோற்றை ஆக்கும் முறையில் பண்டைக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். அதில் சேர்க்கும் நறுமணப் பொருள்களின் அளவில் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். செய்ம்முறையில் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். ஆனால் அக்கால ஊன் சோறுதான் இக்கால பிரியாணிஎன்பதில் ஐயமிருக்க முடியாது !

 

சோறு என்பதைக் குறிக்கும் இன்னொரு சொல் அடிசில்”. நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் என்பது புறநானூறு (188).  ஊன்சோறு (கறி கலந்த சோறு) என்பதை ஊனடிசில்என்று சொன்னால் இன்னும் சுவையாக இருக்கும்.  எனவே பிரியாணிஎன்பதைத் தமிழில் ஊனடிசில்என்று மொழியாக்கம் செய்தல் பொருத்தமுடையதாக இருக்கும்.

 

”ஊனடிசில்” என்பது பொதுச்சொல். ஊனடிசிலில் பலவகை உள்ளன. ஒவ்வொரு வகையையும் குறிப்பிட வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தலாம். ”மட்டன் பிரியாணி” என்பதை ”ஆட்டூன் அடிசில்” (ஆடு + ஊன் + அடிசில் = ஆட்டூன் அடிசில்) என்று சொல்லலாம். அதாவது ஆட்டுக் கறி கலந்த சோறு. ஆட்டுக்கு இன்னொரு பெயர் “மறி”. எனவே மறி + ஊன் + அடிசில் = மறியூன் அடிசில் ! இதை இன்னும் சுருக்கமாக ”மறியடிசில்” எனலாம் !

மாட்டுக்  கறி கலந்து செய்யப்படும் பிரியாணிக்கு பீப் (Beef)  பிரியாணிஎன்று பெயர். மாட்டுக்கு வேறு பெயர் ஆன்”. எனவே ஆன் + ஊன் + அடிசில் = ஆனூன் அடிசில்; அதாவது ஆன் கறிக் கலந்த சோறு. இதைச் சுருக்கமாக ஆனடிசில்எனலாம் !

 

சிக்கன் பிரியாணி என்பது  கோழிக் கறிக் கலந்த சோறு. இதைக் கோழியூன் அடிசில் எனலாம். இதை இன்னும் சுருக்கமாக கோழியடிசில்” என்று சொல்லலாம். முட்டை பிரியாணி என்பது ”வேக வைத்த முட்டைக் கரு கலந்த சோறு”. இதை  “முட்டையூன் அடிசில்”,அல்லது சுருக்கமாக “முட்டையடிசில்” என்று சொல்லலாம் ! முட்டையின் ஓட்டுக்குள் இருப்பது நீர்ம வடிவிலான ஊன் (இறைச்சி) தானே ! ஆகையால் ”முட்டையூன்” அடிசில் - சுருக்கமாக “முட்டையடிசில்” என்பது பொருத்தமன்றோ !

 

சரி ! “வெஜிடபிள் பிரியாணி” என்பதை எப்படி அழைப்பது என்ற ஐயம் வருகிறதா ? அதையும் பார்ப்போம் ! காய்களின் உள்பகுதியில் என்ன இருக்கிறது ? “சதை “ அல்லவா ?  நல்ல சதைப் பற்று உள்ள முருங்கைக் காய் என்னும் உலக வழக்கை நோக்குக ! சதைதசைஊன் என்பவை ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள். எனவே சதை என்பது “ஊன்” அன்றி வெறென்ன ? ஆகையால் “வெஜிடபிள் பிரியாணி” என்பதைக் “காயூன் சோறு” (காய் + ஊன் + சோறு = காயூன் சோறு) எனலாம். இதை இன்னும் சுருக்கமாக ”காயடிசில்” என்று சொல்லலாமே !


நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற அழகிய சொற்களை வழக்கறச் செய்துவிட்டுஆங்கிலச் சொற்களை இரவல் வாங்கிப் பயன்படுத்துவது நமக்கு அழகல்லவே  !

 

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு கனவு கண்டார் பாரதியார்அவர் பிறந்த நாளில் அவர் படத்திற்கு மாலையிட்டு வணங்கினால் மட்டும் போதுமா ? அவரது கனவை நனவாக்க வேண்டாவா ?

 

பாரதியின் கனவுக்கு  வடிவம் தர இன்றே உறுதி ஏற்போம் ! இனி ”பிரியாணியைத் துறப்போம்; “ஊனடிசில்” உண்போம் ! பண்டை இலக்கியங்கள்  “ஊன்சோறுஎன்னும் சொல்லை ஆண்டாலும், நாம் அதைச் சற்று மேம்படுத்தி   “ஊனடிசில்என்று உரைப்போமே   !

 

பொதுச் சொல்லான பிரியாணிஎன்பதை மட்டும் ஊனடிசில்என்று உரைத்தால் சுவையாக இருக்காதா என்ன ?

 

-------------------------------------------------------------------------------------

 

                       BRIYANI .............................=  ஊனடிசில் 

                       MUTTON BRIYANI...........=  மறியடிசில் 

                       CHICKEN BRIYANI..........=  கோழியடிசில்

                        BEEF BRIYANI..................=  ஆனடிசில்

                        EGG BRIYANI....................=  முட்டையடிசில்

                        VEGETABLE BRIYANI....=  காயடிசில் 

--------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி.2052, சிலை (மார்கழி) 06]

{21-12-2021}

--------------------------------------------------------------------------------------

ஊனடிசில் = BRIYANI